Friday 30 March 2012

மனிதனை மிஞ்சும் திறனில் மற்ற உயிரினங்கள்…

Posted On March 30,2012,By Muthukumar
மனிதன் எல்லா படைப்புகளிலும் தலைசிறந்தவனாய் விளங்க, அவனது புத்திசாலித்தனமும் விவேகமுமே காரணமாகும். அவனிடம் கடமை உணர்வு, பிறர்க்குதவும் பண்பு, அன்பு ஒத்துழைப்பு, இரக்கம் போன்ற நற்குணங்கள் உள்ளன. இரக்கம் போன்ற நற்குணங்கள் உள்ளன. ஆனால் அவன் நல்ல முறையில் பயன்படுத்துகிறானா?
இந்த குணங்கள் மற்ற ஜீவராசிகளிடமும் காணப்படுகின்றன. அவை அவற்றை வெளிப்படுத்தவும் செய்கின்றன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளை எடுத்தியம்ப விரும்புகிறோம்.
மிருகங்களிலும் பறவைகளிலும் சில இனங்கள் மிகுந்த அறிவுத்திறன் உள்ளனவாக இருக்கின்றன. சிறிதளவு முயற்சி செய்தாலே அவைகளை நல்ல முறையில் பயிற்றுவிக்க முடியும். மற்ற பறவைகளை விட புறா மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மாஸ்கோவைச் சேர்ந்த "அனாதோலி ஷெராவ் இன்ஸ்டிட்யூட்' பறவை, மிருகங்கள் பற்றிய பரிசோதனைகளைத் தனிப்பட்ட முறையில் துவங்கியுள்ளது. அங்கு இவற்றின் உடலமைப்பு, நடவடிக்கை, அறிவுத்திறன் ஆகியவற்றைப் பயிற்சிகள் மூலம் பயனுடையவைகளாக்குகிறார்கள். இவ்வாறு பரீட்சை செய்ததில் ஏறக்குறைய அரை டஜன் மிபருகங்களும் பறவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாகி அவற்றிற்கான செயல் திட்டங்களும் பாடத்திட்டங்களும் தயார் செய்யப்படுகின்றன.
மிருகங்களை ஆசைகாட்டியோ, அடித்து உதைத்தோ பயிற்சியளித்துத் தங்கள் வழிக்குக் கொண்டு வருகிறார்கள். எந்தெந்த மிருகத்திற்கு இரக்கம் காட்டத் தேவையுள்ளதோ அவற்றை அருகில் வைத்தக் கொண்டு அன்போடு அவற்றின் கண்களை நோக்குகிறார்கள். இந்த முறையில் அவை ஈர்க்கப்பட்டு அடிபணியும் தன்மைக்குத் தள்ளப்படுகின்றன. அப்போது சின்னச்சின்ன கட்டளைகள் இடுகிறார்கள். அவைகள் இயற்கையாய் செய்யத் துவங்குகின்றன.
பயிற்சி பெற்ற நாய்கள் மனிதர்களுக்குத் தேவையான பற்பல பணிகளைச் செய்கின்றன. நெருக்கடியான நேரங்களில் "இந்திய அரசர்கள் போர்க்களங்களிலும் நாய்களைப் பல வேலைகள் செய்ய வைத்திருக்கிறார்கள்' என்று பாணபட்டர் எழுதியுள்ளார்.
கி.மு.101ல் ட்யூடஸ் என்பவர் நாய்களின் உதவியால்தான் ரோமானியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றார். இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனி இந்த வேலைகளுக்கு ஒரு லட்சம் நாய்களுக்குப் பயிற்சியளித்த. நெப்போலியனின் வெற்றியில் நாய்களுக்குப் பெரும் பங்கு உண்டு. கி.பி.1904ல் ரஷ்யா, ஜப்பான் யுத்தத்தில் நாய்கள் பெரும்பங்கு வகித்தது. துப்பறியும் வேலைக்கு இவை மிகவும் பயன்பட்டன. இவற்றின் முகரும் குணத்தினால் குற்றவாளிகளையும் பகைவர்களையும் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. இன்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாய்ப்படைகளுக்குப் பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வெற்றியடைந்து வருகிறார்கள்.
நாய்களைப் போலவே குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும்கூட படையில் முக்கியமான இடம் வகிக்கின்றன. பயிற்சி அளிக்கப்பட்ட குதிரைகளும் கோவேறு கழுதைகளும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தன் எஜமானர்களைக் காப்பாற்றுவது, பதுங்கி இருந்து பகைவர்களைத் தாக்குவது போன்ற செயல்களைத் திறம்படச் செய்கின்றன. மலைகளில் நடைபெறும் போர்களில் கோவேறு கழுதைகள் திறமையுடன் பணியாற்றுகின்றன. வானத்திலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களில் கோவேறுக்கழுதைகள் திறம்பட, பைனாகுலரால் கூட கண்டுபிடிக்க முடியாதவாறு பதுங்கி இருக்கின்றன.
ஹேம்பர்க் உயிரியல் பூங்காவிலுள்ள சிம்பாஞ்ஜி மனிதர்கள் போலவே சிறிய சக்கரம் பொருத்தப்பட்டுள்ள சைக்கிளில் சவாரி செய்து மக்களை மகிழ்விக்கிறது. கேலரியில் உயரத்தில் தொங்க விட்ப்பட்டிருக்கும் வாழைப்பழக்குலையை எம்பிக் குதித்துப் பிடிக்க முயன்று எட்டாத நிலையில் அது அறையிலிருந்த ஒரு பெட்டியைக் கொணடு வந்து போட்டு எட்ட முயற்சித்தது. முடியாத நிலையில் மேலும் மேலும் பல பெட்டிகளை அடுக்க அவற்றின் மேல் ஏறி நின்று எட்டிக் குதித்து பழக்குலையை பிடித்தது, அதன் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
இதேபோல் பறவைகளில் பயிற்சி பெற்ற புறாக்கள் மிகவும் பயன்படுகின்றன. இங்கிலாந்திலுள்ள ப்ளீமௌத்திலுள்ள ஆஸ்பத்திரியில் ரத்தப் பரிசோதனை செய்தபின் அவற்றின் ரிசல்டை வாங்கி வர நன்கு பயிற்சி பெற்ற புறாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பரிசோதனை செய்ய வேண்டிய ரத்தத்தை சிறிய பையில் ஊற்றி இதன் கால்களில் கட்டிவிட்டால் நேரே பரிசோதனைச் சாலையை அடைகின்றன. மருத்துவர்கள் அதைப் பரிசோதனை செய்து அதன் ரிசல்டை ஆஸ்பத்திரிக்குத் தொலைபேசி மூலம் சொல்லி விடுகிறார்கள். இதன் மூலம் நேரமும் செலவும் குறைகிறது.
மொத்தமாய் உள்ள பொருள்களிலிருந்து நல்லது, கெட்டதைப் பிரிக்கும் திறனுடையதாகப் புறாக்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. கேப்சூல், விதைகள், பால்பியரிங் ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கும் திறமை புறாக்களுக்கு உண்டு.
அமெரிக்காவிலுள்ள வால்டேர் ரிச் என்பவர் இயந்திரங்களிலுள்ள கோளாறுகளை விரைவில் கண்டுபிடிக்கும் திறமையுள்ள புறாக்களை அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். புறாக்கள் துப்பறியும் வேலையைக் கூடத் திறம்படச் செய்கின்றன.
இதேபோல் இன்றும் பற்பல பறவைகளும் மிருகங்களும் பயிற்சியினாலும் சூழ்நிலையாலும் பற்பல விஷயங்களைக் கற்று, மனிதனைவிட திறமையாய்ப் பணியாற்றுவதை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

No comments:

Post a Comment