Monday 2 April 2012

யாருக்கு பாலுறவு ஆசை குறையும்?

Posted On April 02,2012,By Muthukumar


திருமணமாகி, தம்பதிகளாக வாழும் இளைஞர்களும், இளம்பெண்களும் கூட இப்போது `பாலுறவு ஆசைக் குறைபாட்டால்' பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்போதாவது ஒருமுறை கூட செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லாமல் போவதையும்- அல்லது அந்த ஆசை குறைந்து போவதையும், `பாலுறவு ஆசைக் குறைபாடு' என்கிறோம். ஆசை இருந்தாலும் பாலுறவு கொள்ளும் திறன் குறைந்துபோனால் அதனை `பாலுறவு திறன் குறைபாடு' என்கிறோம்.

யார்- யாருக்கு பாலுறவு ஆசை குறையும்?

மன இறுக்கத்தில் இருப்பவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கும் திறன் குறையும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஆசை குறைகிறது. சிலருக்கு மாதவிடாய் காலத்தில் ஆசை குறையும். குறிப்பிட்ட சில நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளாலும் தற்காலிக குறைபாடு ஏற்படுவதுண்டு.பாலுறவில் விருப்பம் இல்லாமல் இருக்கும் ஆண்களில் 45 சதவீதம் பேர், `தங்களுக்கு ஒற்றைத் தலைவலியால் ஆசை குறைகிறது' என்று குறிப்பிடுகிறார்கள். சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரையில், நாட்பட்ட நிலையில் அதிக களைப்பு, மயக்கம், படபடப்பு போன்றவைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் அவர்களால் செக்சில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. உறவின்போது அவர்களுக்கு தானாக சிறுநீர் கசிவதும் புதுவித நெருக்கடியை உருவாக்கும். அவர்களுக்கு ரத்த ஓட்டம் போதிய அளவில் இருக்காது. சீராகவும் இருக்காது. அதனால் அவர்களது மூளை தேவையான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தாது.



பாலுணர்வு உறுப்புகளும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேகமாக செயல்படாது.வயதிற்கும்- பாலுணர்வு செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. மனிதனின் ஆயுள் முன்பைவிட இப்போது மருத்துவத்தால் அதிகரித்திருக்கிறது என்றாலும், மனிதர்கள் ஆயுளின் பெரும்பகுதியை நோயுடன் கழிக்கும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி பெண்களின் சராசரி வயது ஆண்களைவிட ஆறு ஆண்டுகள் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் நம் நாட்டு நடுத்தரவயது பெண்கள் மாதவிலக்கு முற்றுப்பெற ஆரம்பித்ததுமே, `தாம்பத்ய உறவுக்கும்` ஒரு முற்றுப்புள்ளி விழுந்து விடுவதாக நினைக்கிறார்கள். இது தவறான எண்ணமாகும். உண்மையில் நடுத்தர வயதைக் கடந்தாலும் பெண்களுக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருக்கவே செய்யும்.



அவர்களது துணைவர்கள் தான் வயது மூப்பின் காரணமாக தாம்பத்ய திறன் குன்றியவர்களாகிறார்கள். தற்போது எடுக்கப்பட்ட சர்வே படி ஐம்பது வயதுக்கு உள்பட்ட திருமணமான ஆண்களில் 98 சதவீதம் பேருக்கு செக்ஸ் செயல்பாட்டில் ஆர்வம் போதுமான அளவு இருக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் 50 வயதைக் கடப்பதில் இருந்து படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது. 50 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 93 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் ஆர்வம் உள்ளது. 50 வயதைக் கடந்த பின்பு ஆண்களைவிட வேகமாக அவர்கள் ஆசை குறைந்துவிடுவதாகவே தற்போதைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 50 முதல் 60 வயதில் பெண்களின் செக்ஸ் ஆர்வத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு நாட்டம் குறைந்து விடுகிறது.




அந்த பருவத்தில் அவர்களுக்கு பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து விடுவதே அதற்கு காரணம். இதனால் பிறப்பு உறுப்பில் வறட்சி, வலி, நோய்த் தொற்று, தசை நெகிழ்வு இல்லாத நிலை போன்றவைகள் தோன்றுகின்றன. அப்போது நிலவும் குடும்பச்சூழல்களும் பாலுறவு வேட்கையை மட்டுப்படுத்தி விடுகிறது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட கணவர், மனைவி இருவருக்குமே நரம்பு மற்றும் உடல் பலகீனங்கள் ஏற்படுகின்றன. மனஇறுக்கமும் தோன்றுகிறது. அதனால் செக்ஸ் தொடர்பு அவர்களுக்கு அச்சமூட்டும், அல்லது அவசியமற்றது என்று எண்ணத்தோன்றும்.



செக்ஸ் ஆர்வமின்மை தம்பதிகளில் இருவருக்கோ, ஒருவருக்கோ ஏற்பட்டால் முதலில் அவர்கள், `இதுவும் ஒரு நோய்த்தன்மை போன்றதுதான், இதற்கும் மருத்துவ விஞ்ஞானத்தில் தீர்வு இருக்கிறது' என்று நம்ப வேண்டும். பின்பு அந்த ஆர்வமின்மை மனரீதியான பிரச்சினையா? உடல்ரீதியான குறைபாடா என்பதை மருத்துவரீதியாக கண்டறிய முன்வர வேண்டும். பின்பு அதற்கான சிகிச்சைகளை செக்ஸாலஜிஸ்ட்டிடம் பெற வேண்டும். செக்ஸ் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள மிக முக்கியமான தேவை கணவன், மனைவி இடையே இணக்கமான காதல் உணர்வு. கோபம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை தவிர்த்து விட்டு தனது இணையுடன் முழுமனதோடு உறவுகொள்ள முன்வர வேண்டும். மனம்விட்டுப்பேசி தங்கள் மகிழ்ச்சியை தாங்களே மீட்டெடுப்பது மிக அவசியம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

No comments:

Post a Comment