Wednesday 4 April 2012

சிறுவர்கள் உச்சா வில் வேக வைக்கும் முட்டை

Posted On April 04,2012,By Muthukumar
தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். அழகிய கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்டை எடுத்து செல்லதான் அவர்களும் காத்திருக்கின்றனர். காலையில் இருந்து மாலை வரை பள்ளியில் சிறுவர்கள் கழிக்கும் சிறுநீர், பக்கெட்டில் சேகரிக்கப்படுகிறது. அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர்.
இதற்கு பள்ளிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுமதி வழங்கி உள்ளன. பள்ளி முடிந்து சிறுவர்கள் சென்றபின், டாய்லெட்டில் சென்று சிறுநீர் நிரம்பி இருக்கும் பக்கெட்டை தூக்கி செல்கின்றனர். பின்னர் அந்த சிறுநீரில் முட்டைகளை போட்டு வேக வைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். அப்போது கமகம வென வாசனை வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்கள் அந்த வாசனையை நுகர்ந்தபடி செல்கின்றனர். டாங்யாங் நகரில் பல நூறு ஆண்டுகளாக இந்த வழக்கம் இருப்பதாக கூறுகின்றனர்.
பாரம்பரிய உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம். சிறுநீரில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால் மூட்டு வலி இருக்காது, சன் ஸ்ட்ரோக் வராது, வாசனையாகவும் இருக்கும். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்த எந்த சரியான விளக்கமும் உள்ளூர் நிர்வாகத் தரப்பில் இல்லை. எனினும் இந்த முட்டை விற்பனையை தடுக்கவும் இல்லை. இந்த பாரம்பரிய உணவை தயாரிக்க நிறைய நேரம் ஆகும்.
பள்ளிகளில் சிறுநீரை சேகரித்து, முட்டைகளை அதில் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து, அதன்பின் ஓடுகளை நீக்கி, அதன்பின் சில மணி நேரம் முட்டைகளை மீண்டும் கொதிக்கும் சிறுநீரில் வேகவைக்க வேண்டும். அதன்பின்னர்தான் விற்க வேண்டும் என்று பெருமையாக கூறுகின்றனர். இவ்வளவு கஷ்டங்கள் இருப்பதால், இந்திய மதிப்பில் ரூ.12.50க்கு ஒரு முட்டையை விற்கின்றனர். அதற்கேற்ப தங்கள் மூதாதையர்கள் கண்டுபிடித்த இந்த பாரம்பரிய உணவை உண்பதால், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், உடல் வலி இல்லாமல் இருப்பதாகவும் டாங்யாங் நகரத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. கடைகளில் விலை அதிகம் என்பதால் வீடுகளிலும் சிலர் சிறுவர்களின் சிறுநீரை சேகரித்து முட்டைகளை அதில் வேகவைத்து உண்கின்றனர். எனினும், இந்த முட்டையை பிடிக்காதவர்களும் நகரில் இருக்கத்தான் செய்கின்றனர்.

No comments:

Post a Comment