Tuesday 31 January 2012

மூளையைக் காக்கும் உணவுக் கட்டுப்பாடு!

Posted On Jan 31,2012,By Muthukumar
குறைவாகச் சாப்பிடுவது, மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்கிறார்கள், இத்தாலி விஞ்ஞானிகள்.
கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் இவர்கள்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
``எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான். உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம்'' என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ரோமைச் சேர்ந்த விஞ்ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி.
கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்
திருக்கின்றனர்.
இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment