Sunday 12 August 2012

காக்க… காக்க… கிட்னி காக்க!

Posted On Aug 12,2012,By Muthukumar
நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ""நம் வாழ்க்கை முறைகளால், 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்களை, வெகுவாக பாதிக்கிறது, ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி என்ற நோய். உலகில், ஜப்பானுக்கு அடுத்த படியாக, நம் நாட்டிலும், சீனாவிலும், இந்நோயால் அவதிப்படுவோர் ஏராளம்,'' என்ற அதிர்ச்சி தகவலை தருகிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைமை நிபுணர், டாக்டர் கே. சம்பத் குமார்.
இத்துறையில், 20 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர், தென் மாவட்டங்களில் மக்களை பாதித்திருக்கும் சிறுநீரக நோய்கள் பற்றி ஆய்வு செய்தவர். வெளிநாட்டில் பல்வேறு கருத்தரங்குகளில், சிறுநீரக நோய்கள் தொடர்பாக, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தவர். இளைஞர்களை தாக்குகிறது டாக்டர் சம்பத் குமார் கூறியதாவது: சிறுநீரக நோய்கள் தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், புதுப் புது ஆராய்ச்சிகள் காரணமாக, நோய்கள் பற்றி நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றன. நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் (ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி) பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் பள்ளிகளில், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றம்: இந்நோயின் ஆரம்ப அறிகுறியாக, ரத்தத்தில் அலர்ஜி உருவாகி, சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். இந்த நோய் தாக்கிய பத்தாண்டுகளில், சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்படும். சிறுநீரைச் சோதனை செய்வதன் மூலம், இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மாத்திரைகள் மூலம் குணமாக்க முடியும். இந்த நோய்க்கான காரணம், முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நம் வாழ்க்கை முறைகள் காரணம். உணவில் உப்பை குறைப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் பருமனை குறைப்பது போன்றவை பயன்தரும். இளைய தலைமுறையினர், மைதா உணவினை தவிர்ப்பது அவசியம். இதில், கணையத்தைத் தாக்கும், மூலப்பொருள் உள்ளது. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, யூரிக் அமிலம் உருவாகி, சிறுநீரக கல் ஏற்படும். சிறுநீரக கல் பெரிதானால், அது இரண்டு கிட்னியையும் அடைத்து விடும். வயிற்றில் வலி, ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் அளவை, ஆண்டிற்கு ஒரு முறை, தரமான ஆய்வகத்தில் சோதிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை, சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியம். முப்பது வயதிற்குள், ரத்த அழுத்த நோய் இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏதும் உள்ளதா என, பரிசோதிப்பது அவசியம். சர்க்கரை நோய் உள்ள, 100 பேரில், 40 பேருக்கு பத்தாண்டுகளில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு டாக்டர் சம்பத் குமார் கூறினார்.

No comments:

Post a Comment