Friday 29 June 2012

திருமணத்துக்கு முன்பே `தேனிலவு’!- பரவிவரும் `பகீர்’ கலாசாரம்

Posted On June 29,2012,By Muthukumar

24 வயதாகும் சிம்ரன் பரிஜா அழகுப் பெண். அதிர்ஷ்டசாலிப் பெண்ணும் கூட. ஆம், சுவீடனில் முற்றிலும் இலவசமாக எம்.பி.ஏ. படிக்க `ஸ்காலர்ஷிப்' கிடைத்திருக்கிறது இவருக்கு.
``இதற்கு மேல் பெரிதாக ஒன்றை நான் கேட்க முடியாது. இந்த வாய்ப்புக் குறித்து நான் சந்தோஷப் படபடப்பில் இருக்கிறேன். எனது சந்தோஷத்துக்குக் கூடுதல் காரணம், வெளிநாட்டில், யாருடைய கவனிப்பும் இல்லாத சூழலில் பாய் பிரெண்டுடன் ஜாலியாக இருக்கப் போகிறேன் என்பதுதான். ஆம், இது எனக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைக்கப்படும் உல்லாசப் பயணம். இதை நானும், அபியும் (பாய்பிரெண்டு அபிமன்யுவின் செல்லச் சுருக்கம்) கொண்டாடித் தீர்க்கப் போகிறோம். ஸ்பெயின், பாரிஸ், சுவிஸ், மெக்சி கோ என்று சந்தோஷ உலா வரப் போகிறோம்'' என்று சிலிர்த்துச் சிரித்துப் பேசிக் கொண்டே போகிறார் சிம்ரன்.
புரிகிறதா?
அப்பட்டமாகச் சொல்வதென்றால், கல்யாணமாகாத சிம்ரனும், அவரது பாய் பிரெண்டும் தேனிலவு கொண்டாடப் போகிறார்கள். ஒரு தேனிலவின் `எல்லா' விஷயங்களும் இதில் உண்டு.
அதிர்ச்சியாக இருக்கிறதா? `பாய் பிரெண்டு' அபிமன்யு சொல்வதையும் கேளுங்களேன்...
``நாங்க ஏற்கனவே கோவா, கூர்க், முசவுரி, ஸ்ரீநகர், ஏன், அந்தமான் தீவுகளுக்கு நான்கு நாட்கள் உல்லாசப் பயணக் கப்பல் பிரயாணம் கூட செய்திருக்கிறோம். இந்த இடங்களில் `ஒன்றாக'க் கழித்திருக்கிறோம். இதுதான் எங்களின் முதல் சர்வதேசப் பயணம்'' என்று பூரிக்கிறார் அபிமன்யு.
கல்யாணத்துக்கு முன்பே எல்லாமேவா என்று நீங்கள் பத்தாம்பசலித்தனமாகக் கேட்டால் அதற்கு சிம்ரனின் பதில்:
``எங்க குடும்பம் ரொம்பப் பராம்பரியப் பிடிப்புள்ளது. என்னோட காதலுக்கு அவங்க ஒத்துக்கலை. அதனால பிரிஞ்சுடலாம்னு நானும், என் பாய் பிரெண்டும் தீர்மானிச்சோம். ஆனா அது எங்க ளால முடியல. சரி, திருமணம்தானே பண்ணிக்க முடியாது, சலிக்க சலிக்க அனுபவிச்சுத் தீர்த்துடு வோம். அதுக்கு யார் தடை போட முடியும்னு முடிவு பண்ணி னோம். நாளைக்கு நான் யாரையோ, அவன் யாரையோதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். ஆனால் அதற்காக இன்றைய சந்தோஷத்தைத் துறக்கணுமா?'' என்று அதிரவைக்கிறார்.
சிம்ரனின் தலைமுறை தாண்டியவர்களுக்கு இதெல்லாம் திக்பிரமையூட்டுவதாக இருக்க லாம். ஆனால் இவர் வயதை ஒத்த நிறையப் பேர், இதுபோன்ற நிறையக் கதைகளைக் கூறுகிறார்கள்.
தேசிய ஆரோக்கியப் புள்ளிவிவர மையம் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் `சேர்ந்து வாழும்' ஜோடிகள் அதிகரித்து வருகிறார்கள். அவர்களில் 40 சதவீதம் பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதெல்லாம் பெருநகரங்களில் நடக்கும் சங்கதி என்று நாம் சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது. `லிவ்-இன்' ஜோடிகளில் 50 சதவீதம் பேர், இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
``ரொம்பக் கட்டுப்பாடான குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்களுக்கு இது, (அதாவது, ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது) ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது. சேர்ந்து வாழ்வது சுதந்திரமானது, பிரச்சினையில்லாதது என்பது அவர்களின் எண்ணம். இப்போதெல்லாம் உணர்வு ரீதியான பிணைப்புகளுக்கு இங்கு இடமில்லை. இந்தத் தேனிலவுக் காலத்தை முடிந்த அளவு அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். இது நீண்டகாலம் ஓடாது என்று தெரிந்தே இதில் ஈடுபடுகிறார்கள். இளம்பருவத்தினருக்கு இது ரொம்ப நல்ல, வசதியான முறையாகத் தெரியும் அதேவேளையில், சமூகவியல் நிபுணர்கள் திகைத்து நிற்கிறார்கள். திருமணத்துக்கு முந்தைய இந்த `தேனிலவு' நிச்சயம் ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இன்று இதை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் வருங்காலத்தில் இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரிக்கைக் குரல் கொடுக்கிறார், சமூகவியல் பேராசிரியையான பத்மா பிரியதர்ஷினி.
ஆனால், `லிவ்-இன் ரிலேசன்ஷிப்'பில் ஆர்வம் காட்டுவோர், `காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
``நானும் விஷ்வாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் லண்டனில் நான் போய் இறங்கும்போதெல்லாம், அங்கு சில நாட்கள் விடுப்பு எடுத்துகொண்டு விஷ்வாவுடன் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த மாதம் கூட நாங்கள் `பிரேக்' நகருக்கு போகப் போகிறோம். அது நான் செல்ல ஏங்கும் கனவு நகரம். அந்தக் கனவை விஷ்வா நனவாக்கியிருக்கான்'' என்று கூறும் கிருத்திகா, பிரிட்டீஷ் ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ்.
இவரும், இளந்தொழிலதிபரான இவரது காதலரும் 10 ஆண்டுகளாக `தொடர்பில்' இருக்கிறார்கள். உலக முழுக்கச் சுற்றியிருக்கிறார்கள். திருமணமான எந்தத் தம்பதியும் கூட அந்தளவுக்கு சுற்றி, அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்த ஜோடி சேர்ந்திருக் கும் கடைசி வருடம் இதுவாம்.
``என்னோட பெற்றோர் எனக்குத் தீவிரமா மாப்பிள்ளை தேடிக்கிட்டிருக்காங்க. சீக்கிரமே ஒரு ஆளைப் பிடிச்சுடுவாங்க. நான் இம்முறை இந்தியா வரும்போது, ஐந்து மாப்பிள்ளை களின் ஜாதகங்கள் என்னோட தேர்வுக்காக காத்துக்கிட்டிருக்கும். ஆனா மாப்பிள்ளை யார், எப்படி என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. நான் விஷ்வாவுடன் போதும் போதும்கிற அளவுக்கு `என்ஜாய்' பண்ணிட்டேன்'' என்று மனந்திறந்து பேசுகிறார் கிருத்திகா.
இந்த மாதிரியான ஒரு `டிரெண்டு'க்கு, தங்கள் பெண்கள், பிள்ளைகளை கவனிக்காத பெற்றோர் ஒரு முக்கியக் காரணம் என்று குற்றஞ்சாட்டும் சமூகவியலாளர்கள், இது சீரியசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
``இந்த மாதிரியான ஒரு நடத்தை, அந்த நேரத்தில் சந்தோஷம் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் இது பாதிப்பை ஏற்படுத்தும். சட்டையைக் கழற்றுவதைப் போல ஓர் உறவை உதறிவிட்டு, அதே பொறுப்போடு இன்னோர் உறவில் நுழைவது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய நபர்கள், தங்களுக்கும் உண்மையாயில்லை, தமது பெற்றோருக்கும் உண்மையாயில்லை, வாழ்க்கைத் துணைக்கும் உண்மையாயில்லை. இன்றைய சூழலில் பாலின பேதம் பாராமல் பழகுவது தவறில்லை. ஆனால் அது படுக்கை வரை போய்விடக் கூடாது'' என்று எச்சரிக்கைக் கொடி பிடிக்கிறார்கள்.
இன்றைய இன்பமே வேதம் என்று ஓடும் இளைய சமுதாயத்தின் காதில் விழுமா?
அதிர வைக்கும் ரகசியம்
* திருமணமாகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளில் 13 சதவீதம் பேர் அழகான சுற்றுலாத் தலங்களில் தேனிலவு வைத்துக்கொள் கிறார்கள்.
* சேர்ந்து வாழும் ஜோடிகளில் 40 சதவீதம் பேர் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
* `லிவ்-இன்' தம்பதியரில் 80 சதவீதம் பேர் உடல்ரீதியான உறவு வைத்திருக்கிறார்கள்.
* சேர்ந்து வாழும் தம்பதிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே கடைசியில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
-தேசிய குடும்ப நல மையத்தின் சர்வே தெரிவிக்கும் தகவல்கள்.

No comments:

Post a Comment