Friday 13 April 2012

கோடையை குளுமையாக்க “ஜில்’ டிப்ஸ்!

Posted On April 13,2012,By Muthukumar
உஷ்... உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி... இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்...
* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.
* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், "பளிச்' வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
* அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.
*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.
* குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.
* கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.
* கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
* மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.
* மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
* வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,"ஏசி' அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.
* வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.

No comments:

Post a Comment