Tuesday 17 January 2012

துரித உணவு தரும் துன்பங்கள்.

Posted On Jan 17,2012,By Muthukumar

                       
                      இன்றெல்லாம் கடைக்குப் போனால், எல்லாமே ரெடிமேட்தான். ”ரெடி டூ ஈட்” வகை உணவுகள், நம்ம வீட்டு மஹாலக்‌ஷ்மிகளை, நச்சென்று கவர்ந்துவிடும். நம் முன்னோர்கள், வீட்டு வேலைகளுக்குக்கூட, பெண்களுக்கு உடல் வலுவேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்,அதற்கான உபகரணங்களைப் படைத்துள்ளனர்.
                 வீடு பெருக்குவதும், முற்றம் தெளிப்பதும், கோலமிடுவதும், அம்மி அரைத்தலும், அவரவர் வேலையினூடாக அவர்களுக்குக் கிடைக்கும் உடற்பயிற்சி எனலாம். அவையெல்லாம், அவசர யுகத்தில், தேவையற்று, தேடிப்பிடிக்க வேண்டியது போதாதென்று, அன்றாடம் நம் உடல் நலத்தைக் குறி வைத்துத் தாக்கும் அணு குண்டுகளாய் வந்து இறங்குவன, துரித உணவுகள் என்லாம்.
                       நம்ம ஊர் பேக்கரியில, நாளும் செய்து வெளிவரும் ரொட்டிகள், நாலு நாள் இருந்தாலே, நார் நாரா, பூஞ்சக்காளான் புடிச்சிக்கும். ஆனா, இன்னைக்கு, பல சூப்பர் மார்க்கட் ஷெல்ஃபுகளை அலங்கரிக்கும், வண்ண வண்ண தாள்களில் பொதியப்பட்ட பிரட்களோ, பத்து நாட்களுக்கும் மேலாகவே, பிரஷா இருக்கே, அது எப்படி?
                     விஞ்ஞான வளர்ச்சியை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துறோமோ இல்லையோ, இது போன்ற படு பாதகச்செயல்களுக்கு, பயப்படாம பயன்படுத்துறோம். ஆம், ’பிரிசர்வேட்டிவ்ஸ்’ என்று சொல்லப்படும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே, துரித உணவுகள் மற்றும் ரெடி டூ ஈட் உணவுகளின், உயிர்வாழும் காலத்தை உயர்த்துகிறார்கள்.
                          துரித உணவுகள் பலவற்றில், ’மோனோசோடியம் குளுடாமேட்’ (இதன் மார்கட் பெயர் சொன்னால் அனைவருக்கும் தெரியும்-அதை நான் சொல்வது கூடாது என்பதால் சொல்லவில்லை) எனும் சுவையூக்கி(TASTE IMPROVER) சேர்க்கப்படுகிறது. அதேபோல், ரொட்டி போன்ற பேக்கரி பொருட்களில், சேர்ர்க்கப்படும் சிலவகை வேதிப்பொருட்கள், அவை நெடு நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும். நல்ல விஷயம்தானே என்று சொல்லலாம்.ஆனால், சேர்க்கப்படும் பொருளின் பெயரும், பக்க விளைவுகளும் தெரிந்து கொண்டால், இத்தகைய கேள்வி எழாது.
                                                பேக்கரிப் பொருட்கள் கெடாமலிருக்க, அவற்றில் காளான் படராதிருக்க, கால்சியம் ப்ரொபியோனேட் மற்றும் சோடியம் ப்ரொபியோனேட்(CALCIUM PROPIONATE & SODIUM PROPIONATE) என்ற இரு வேதிப்பொருட்கள் சேர்க்கின்றனர். அவைதான், ரொட்டி வகை உணவுகள் கெட்டுப்போகாமலிருக்கச் செய்கின்றன.அரசு அனுமதித்துள்ள அள்விற்கு அதிகமாகவே இதனைச் சேர்க்கின்றனர். ஆனால், இந்த வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த உணவினை நாம் உண்ணும்போது, அவை நம் வயிற்றிலுள்ள குடல் சுவற்றினை நிரந்தரமாக சேதப்படுத்தும். 
                                           அதிலும், குடல் அழற்சி(ULCER) உள்ளவர்களென்றால், அவற்றிற்கு கூடுதல் குஷி. ஆம், நம் வயிற்றில் வாயுக்கள் உருவாகவும், அழற்சியை அதிகப்படுத்தவும் வல்லவை இந்த வேதிப்பொருட்கள். இதன் பயனாக, குடல் அழற்சி மட்டுமல்ல,தலைவலி, சிறு குழந்தைகளின் தூக்கமின்மை, கவனமின்மை போன்ற பல பிரச்சனைகளும் உருவாகும். துரித உணவுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் மட்டுமின்றி, காய்ந்த பழவகைகள், பால் பொருட்கள், பழச்சாறுகள், ரெடி டூ ஈட்- சப்பாத்தி, பூரி என்று இதனைப்பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது
                                               இவையும் ஒரு வகை கலப்படமே. எனவே, அடுத்த முறை கடைக்குப்போகும்போது, அந்த உணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்.  தவிர்ப்பது ஒன்றே நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் சந்ததிக்கும் நன்மை பயக்கும். 

No comments:

Post a Comment